கோட்டாபயவை ஆட்டிப்படைக்கும் பசில்! சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல் - விமல் சீற்றம்
அமெரிக்காவின் மூலோபாய ஒப்பந்தத்துக்கு அமையவே அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையை பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைய செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை மீண்டும் சுமத்தியுள்ளார்.
ஏற்கனவே இந்தக்குற்றச்சாட்டை சுமத்திய நிலையிலேயே அமைச்சர் விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் ஜனாதிபதியினால் நேற்று அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்தநிலையில் இன்று செய்தியாளர் மத்தியில் கருத்துரைத்த விமல் வீரவன்ச,அமெரிக்க பிரஜையான பசில் ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் பணச்சலவை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
எனினும் அந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கைககளும் எடுக்கப்படவில்லை.
அதற்கு பதிலாக இலங்கையை பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைய செய்யும் ஒப்பந்தத்துக்கு அமையவே அவர் செயற்பட்டு வருவதாக விமல் வீரவன்ச இன்று குற்றம் சுமத்தினார்.
பசில் ராஜபக்ச, தந்திரமான அமைச்சர் என்று கூறப்படுகின்றமை குறித்து கருத்துரைத்த விமல் வீரவன்ச, அவர் திருடுவதில் மாத்திரம் தந்திரமானவர் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தான் விரும்பியவாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்டி படைத்து வருகிறார். கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் அதில் இருந்து எப்படி மீண்டு வருவது என்பது பற்றியே பேசினேன்.
இடையில் பசில் ராஜபக்சவின் செயற்பாடுகளை விமர்சித்து இருந்தேன். இதனையடுத்து நாங்கள் அமைச்சர்களாக பதவி வகித்தால், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வரபோவதில்லை என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதியிடம் கூறியதாக எமக்கு தகவல் கிடைத்தது. இதன் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழமை போல் தனது குடும்பத்தினரின் சொற்படி, தனது சகோதரர், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வருவதற்காக எங்களை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்க தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் எமக்கு கவலையோ, ஜனாதிபதி மீது கோபமே இல்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச என்பவரால், தான் விரும்பியவாறு ஆட்டி வைக்கப்படும் பாத்திரம். பசில் ராஜபக்ச என்பவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சிியன் உரிமையை தனது கையில் வைத்துக்கொண்டு செயற்பட்டு வருகிறார். அந்த கட்சியில் இருக்கும் பொருளாளர், செயலாளர் பதவிகளில் இருப்பவர்களின் பெயர்கள் கூட எமக்கு தெரியாது. ஆரம்பத்தில் கட்சி சிறப்பாக செயற்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படவிருந்த நேரத்தில் பொதுஜன பெரமுன என்ற கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பின்னர், அந்த சட்டப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதற்கு பின்னரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் பதவியில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எவரும் நியமிக்கப்படவில்லை. சாகர காரியவசம் என்பவர் செயலாளராக இருக்கின்றார்.
இது வித்தியாசமான கட்சி. அந்த கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்ச இருப்பது போல் செயலாளராக டளஸ் அழகப்பெரும போன்ற பதவி வகித்திருக்க வேண்டும். எனினும் அந்த கட்சியில் அப்படி நடக்கவில்லை. அந்த கட்சி முற்றிலும் தனிப்பட்ட சொத்து. அந்த சொத்தில் இருக்கும் பலத்தை பயன்படுத்தி தாம் விரும்பியது போல் முடிவுகளை எடுக்க ஜனாதிபதி கட்டாயப்படுத்தப்படுகிறார் என்பது கவலைக்குரிய விடயம்.
ஜனாதிபதியாலும் அந்த அழுத்தங்களில் இருந்து விடுப்பட முடியாமல் போயுள்ளது. நான் வகித்த அமைச்சராக பதவி வகித்த துறையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன். உதய கம்மன்பில அப்படியே செயற்பட்டார். அந்த விடயத்தில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். பதவிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எமது அரசியல் வழமை போலவே இருக்கும்.
நாங்கள் மக்கள் ஆணைக்கு ஏற்ப செயற்பட்டு வந்தோம். மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு எதிராக செயற்படும் போது நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டுள்ளோம். அதேபோல் மக்கள் ஆணையை பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக எங்களை அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கி இருந்தால், நாங்கள் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறோம் என விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.



