ஏற்றுமதி பொருளாதாரத்தின் அடிப்படை கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்: ரணில்
ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தக் கொள்கைகள் மட்டுமே ஏற்றுமதித் தொழிலுக்கு உதவ முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
வங்கிகளின் தலைவர்களை இன்று (26) காலை சந்தித்த போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி
எதிர்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய உலகளாவிய நெருக்கடியில் சுமார் எழுபது நாடுகள் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறிய பிரதமர், அந்த நாடுகளில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“சர்வதேச வட்டி விகிதங்கள் உயரும் அபாயம் அதிகம். சர்வதேச உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது” எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், சரியான கொள்கைகளை வகுப்பதன் ஊடாக அதன் தாக்கத்தை குறைக்க முடியும் என்று பிரதமர் விளக்கியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆலோசணை
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்படும் வரை இந்தப் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வைக் காண்பது கடினம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய வாடிக்கையாளர்களின் தேவைகளின் அடிப்படையில் கடன் ஒத்திவைப்பு நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.