தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள விவகாரம்: தள்ளுபடி செய்யப்பட்ட மனு
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு எதிராக, முதலாளிமார் சம்மேளனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
குறித்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
இதனை ஏற்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுத்துவிட்டது. கூட்டு ஒப்பந்தம் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் போனாதால், தொழில் அமைச்சு தலையிட்டது.
அதன்பின்னர் சம்பள நிர்ணய சபை ஊடாக நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை முதலாளிமார் சம்மேளனம் ஏற்கவில்லை.
சம்பள நிர்ணய சபையின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொழிலாளர்களுக்கும், காங்கிரஸிற்கும் கிடைத்த வெற்றியாகும்.
விசேட கலந்துரையாடல்
அதேபோல தொழிலாளர்களை அடக்கி ஆளலாம் என எவரும் நினைக்ககூடாது. வாழ்க்கை செலவுக்கேற்பவே சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.
எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பது குறித்து நாளைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று தொழில் அமைச்சில் இருப்பதாகவும் இதன்போது, இ.தொ.காவின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் கட்சியின் உயர்பீடத்தின் ஊடாக விசேட தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.