முழு அரசியலிலும் இருந்து விலக தயார் - நாடாளுமன்றில் அறிவித்த அமைச்சர்
என்னுடைய வாழ்நாளில் ஏதாவது ஒரு விதத்தில் நான் 50 சதத்தை தரகுப்பணமாக பெற்றுள்ளேன் என உறுதிப்படுத்தினால் இந்த சபையில் இருந்து மாத்திரம் அல்ல முழு அரசியலிலும் இருந்து விலகிக் கொள்கின்றேன் என்பதை முழு மனதோடு இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன் என வர்த்தகத்துறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இப்படியான அசிங்கமான அரசியல் செய்ய வேண்டாம். இந்த சபையில் அனைவரும் இறக்கப் போகும் மனிதர்களாக பேச வேண்டும்.
ஏனென்றால் நிறைய பணம் படைத்தவர்கள், பலமானவர்கள் எம்முடைய எத்தனையோ அன்பர்கள் இந்த கோவிட் தொற்றினால் இறந்து விட்டனர்.
கிளி மஹாராஜா இறந்துவிட்டார், முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார இறந்துவிட்டார். அவருக்கு நாடாளுமன்ற மரியாதையைக் கூட செலுத்த முடியாமல் போனது.
பிரபலத்தின் உச்சத்திற்கே சென்ற பாடகர் சுனில் பெரேரா இறந்துவிட்டார். அரசியல் பலம் வாய்ந்த மங்கள சமரவீர உயிரிழந்தார்.
ஆகவே நாம் அனைவரும் இறக்கப் போகும் மனிதர்களாக சிந்திக்க வேண்டும். எமக்கு விகாரைகளுக்கு செல்ல கூடிய இன்னும் எத்தனை பௌர்ணமி நாட்கள் இருக்குமென யோசிக்க வேண்டும்.
நாம் செல்லும் போது எதையும் எடுத்துச் செல்ல போவதில்லை. கொள்ளையடித்து, இலஞ்சம் பெற்று, மோசடி செய்து யாரும் எதனையும் கொண்டு போகப் போவதில்லை.
நாம் அவ்வாறு இல்லாமல் சுயாதீனமான அரசியல் செய்து முன்மாதிரியாக இருப்பவர்கள். ஆகவே உண்மையின் பிரகாரம் அனைவரும் செயற்படுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.