அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு கொழும்பு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்ச அவதூறு கருத்துக்களை வெளியிடுவதற்கு கொழும்பு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அவ்வாறான கருத்துக்களை வௌியிடுவதை தடுக்கும் வகையில் மூன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் கொழும்பு மாவட்ட நீதவான் தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.
எதிர்வரும் 31ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பிரதிவாதிகளுக்கு கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ள மனு இன்றுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் எதிர்வரும் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த 9ஆம் திகதி ஆற்றிய உரையின் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அவ்வாறான பொய்யான கருத்துக்களை வௌியிட்டமை மற்றும் தமது பெயருக்கு களங்கம் விளைவித்தமை தொடர்பில் 10 கோடி ரூபா நட்டஈட்டை பிரதிவாதிகளிடமிருந்து பெற்றுத்தருமாறும் றிசாட் பதியுதீன் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.