'ஏழு மாத காலமாக அலைய வைக்கும் பொலிஸார்' - கதறும் பாலசுந்தரத்தின் தந்தை (Video)
கைத்துப்பாக்கியால் சுட்டாரா அல்லது பெரிய துப்பாக்கியால் சுட்டாரா அல்லது கைக்கொண்டால் சுட்டார் என்று கூட தெரியாத அளவுக்கு மட்டக்களப்பு பொலிஸார் நடந்து கொள்ளும் விதம் மிகவும் வேதனை அளிப்பதாக உயிரிழந்த பாலசுந்தரத்தின் தந்தை தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனது வீட்டு வாசற் தளத்துக்கு முன்பாக கடந்த ஆறாம் மாதம் மூன்றாம் திகதி இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு இம்மாதம் 21ம் திகதி வரை கொலையாளியை மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த பாலசுந்தரத்தின் தந்தையார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற படுகொலையைச் சம்பவத்தினை ஏறாவூர் பொலிஸார் விசாரணை செய்து அறிக்கைகள் வழங்கப்படாத காரணத்தினால் மீண்டும் குறித்த துப்பாக்கிச்சூடு விசாரணையை கரடியனாறு பொலிஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாங்கள் அலைந்துதிரிகிறோம்.
இன்றைய தினம் நீதிபதி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடத்தில் எந்த துப்பாக்கியால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸாரிடம் வினவியபோது பொலிஸாருக்கு எந்த துப்பாக்கியால் சுட்டது என்பது தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.
இதன்போது கோபமடைந்த பாலசுந்தரத்தின் தந்தை துப்பாக்கி எதுவென்று தெரியாத ஒருவருக்கு எவ்வாறு துப்பாக்கியை வழங்கினார்கள் என்பது வேதனைக்குரிய விடயம்.
இதனால்தான் இவ்வாறான சம்பவம் நடைபெறுகின்றது. கைத்துப்பாக்கியால் சுட்டாரா அல்லது பெரிய துப்பாக்கியால் சுட்டாரா அல்லது கைக்கொண்டால் சுட்டார் என்று கூட தெரியாத அளவுக்கு மட்டக்களப்பு பொலிஸார் நடந்து கொள்ளும் விதம் மிகவும் வேதனை அளிக்கிறது. தங்களது மகனது கொலைக்கான நீதியை மறைப்பதற்கு பொலிஸார் ஈடுபடுகின்றனர்.
எது எவ்வாறாக இருந்தாலும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இன்று 7 மாதங்கள்
கடந்த நிலையிலும் இதுவரைக்கும் எந்த விதமான அறிக்கைகளும் பொலிஸாரினால்
மன்றுக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.





