பேரணியில் கலந்து கொண்ட 7 பேருக்கு பிணை (Video)
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கும் யாழ். நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இன்றைய தினம் (20.02.2023) நீதிமன்றில் முன்னிலையானபோதே குறித்த 7 பேருக்கு பிணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைக்கழக முன்றிலிருந்து கிழக்கு நோக்கிக் கண்டனப் பேரணி இடம்பெற்றது.
தேர்தல் காலத்தில் போராட்டம் நடத்தியமை, பொது மக்களுக்கு இடையூறு
ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கு எதிராகப் பெப்ரவரி 7ஆம்
திகதி யாழ்ப்பாண பொலிஸாரினால், யாழ். நீதவான் நீதிமன்றில் முதல் அறிக்கை
தாக்கல் செய்யப்பட்டது.
அதனடிப்படையில், குறித்த 7 பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
அதன்படி, அவர்கள் இன்றைய தினம் மன்றில் முன்னிலையானார்கள்.
தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின், மன்றில் முன்னிலையானவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்து சமர்ப்பணம் செய்ததுடன், அடிப்படையிலேயே இந்த வழக்கினை மன்று தள்ளுபடி செய்ய வேண்டும் என விண்ணப்பம் செய்திருந்தனர்.
வழக்கு ஒத்திவைப்பு
அத்துடன், குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோருமாறும் மன்றில் விண்ணப்பித்துள்ளனர்.
இதனையடுத்து, 7 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, வழக்கை எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான, சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா மற்றும் மூத்த சட்டத்தரணி
என். ஶ்ரீகாந்தா ஆகியோர் முன்னிலையாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
