சிவப்பு பட்டியல் நாடுகளுக்கு தொழில் அனுமதியை காலவரையின்றி நிறுத்தியுள்ள பஹ்ரைன்
கோவிட் வைரஸ் சிவப்பு பட்டியல் நாடுகளான இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் மக்களுக்கு வேலை அனுமதி வழங்குவதை பஹ்ரைன் காலவரையின்றி நிறுத்தியுள்ளது.
அந்த நாட்டின் தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் பிரதிநிதி இதனை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தற்போதைக்கு, இலங்கை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ளவர்களுக்கு பஹ்ரைனில் பணி செய்யும் அனுமதி வழங்கப்படாது என்று அவர் கூறினார்.
இந்த முடிவு 2021, மே 24 அன்று எடுக்கப்பட்டது, எனினும் அது எப்போது நீக்கப்படும் என்பது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
மே மாத இறுதியில்,கோவிட் தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து பஹ்ரைன் அதன் சிவப்பு பட்டியலில் நாடுகளின் பயணிகள் நாட்டுக்குள் நுழைவதை நிறுத்தியது.
இந்த நிலையில் சிவப்பு பட்டியலில் உள்ளடங்கியுள்ள நாடுகளில் தமது நாட்டு குடியுரிமை பெற்றவர்கள், இருந்தால், அவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் பணி அனுமதிகளை புதுப்பிக்க முடியும்" என்று பிரதிநிதி கூறினார்.
இதேவேளை, தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக நாட்டின் பல்பொருள் அங்காடிகள்,
உணவகங்கள்,நீச்சல் குளங்கள், அழகு நிலையங்கள் மற்றும் முடிதிருத்தும்
நிலையங்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக பஹ்ரைன் அரசாங்கம்
அறிவித்துள்ளது.