காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலக பதவியிலிருந்து விலகினார் சட்டத்தரணி சிராஸ்
காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகத்துக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இவர் தனது பதவியை ராஜினாமா செய்கின்றமைக்கான நான்கு பிரதான காரணிகளை முன்வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு, காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக எந்த நன்மை பயக்கும் விடயங்களையும் முன்னெடுக்க முடியாமல் போயுள்ளதாகவும், இந்த அலுவலகத்தில் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை என்றும் குறிப்பிட்டு இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் சுதந்திரமாக செயற்படுவதற்கு அரசாங்கம் போதுமான அனுசரணையை அளிக்கவில்லை. ஒருங்கிணைந்த நிதியின் மூலம் போதுமான நிதி ஒதுக்கீடுகளை செய்வதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் அது செய்யப்படவில்லை.
அத்துடன் காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் மீது நீதி அமைச்சின் தலையீடுகள், ஒப்புக்கொள்ளப்பட்டதன் பிரகாரம் அலுவலகத்துக்கு தேவையான உதவிகளை வழங்க வெளிவிவகார அமைச்சு தவறியமை, காணாமல் போனோர் அலுவலகத்தின் நடவடிக்கைகளை செயற்திறனாக முன்னெடுப்பதை கட்டுப்படுத்தும் அந்த அலுவலகத்தின் தற்போதைய யாப்பு உள்ளிட்ட காரணிகளே தனது இராஜினாமாவுக்கான காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 டிசம்பர் 13 ஆம் திகதி சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் ( ஓ.எம்.பி) உறுப்பினராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



