கொரோனாவினால் மரணிக்கும் உடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!
கொரோனாவினால் மரணிக்கும் கிறிஸ்தவ, முஸ்லிம்களின் உடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசே உமது பலத்தை சிறுபாண்மையின் மீது கட்டவிழ்க்காதே கிறிஸ்தவ, முஸ்லிம்களின் மத விழுமியங்களில் கை வைக்காதே, கொரோனாவினால் மரணிக்கும் கிறிஸ்தவ, முஸ்லிம்களின் உடலங்களை நல்லடக்கத்திற்கு அனுமதி அளித்திடு, இலங்கை அரசே ஜனாசாக்களை எரிக்காதே!! ஜனாசாக்களில் இன வாதம் வேண்டாம்! சிறுபான்மை எம்மை நிம்மதியாக வாழவிடுங்கள், மத நம்பிக்கைகளே எமது உரிமை என பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
போராட்டத்தில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் , பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







