மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
இசாலினியின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி இடம்பெற்ற வேண்டும் எனவும், நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டித்தும் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட பெண்கள் விழிப்புணர்வு சங்கத்தின் பங்களிப்புடன் குறித்த போராட்டம் இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மன்னார் மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ, சட்டத்தரணி, பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக வித்தியாவை அடுத்து இசாலினியா?, சிறுவர் பெண்கள் உரிமைகளுக்கு மதிப்பளித்துப் பாதுகாப்போம், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு விரைவாக நீதி வழங்குங்கள், பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தைத் தடுப்போம் உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.