ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி - பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
ஹட்டனில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்களை உடைக்க முயன்ற இளைஞரை கண்டுபிடிப்பதற்காக ஹட்டன் குற்றப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவு அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(04.05.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
ஹட்டனில் அதிகாலையில் நடந்த திருட்டு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அதிகாலையில், வங்கி கிளைக்கு வந்த சந்தேக நபர், இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்களை உடைத்து பணத்தைத் திருட முயன்ற போது, அந்த முயற்சி தோல்வியடைந்த பிறகு சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வங்கி ஒழுங்குமுறை ஆணையம், சந்தேக நபர் இரண்டு ஏ.டி. எம் இயந்திரத்தை உடைக்க முயன்றது தொடர்பான பாதுகாப்பு கேமரா காட்சிகள் மற்றும் புகைப்படங்களைச் சமர்ப்பித்து, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்படி, சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் குற்றப்பிரிவு ஹட்டன் - 076 167 0258 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் நிஷாந்தா டி சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.
