பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம் - சாட்சியங்களில் வெளியான தகவல்
நிதி அமைச்சகத்திலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட நான்கு அதிகாரிகளில் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ரங்க ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் (30) திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம்! பல மாதங்களாக மறைக்கப்பட்ட டொலர் மோசடி - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ரங்க ராஜபக்ஷ குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்புறப் பகுதியில், இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட பிரேதப் பரிசோதனையில் இந்த மரணம் பலத்த வெட்டுக் காயங்களினால் ஏற்பட்ட அதிகப்படியான இரத்தப்போக்கினால் நிகழ்ந்துள்ளதாகவும், அனைத்து காயங்களும் அவரே ஏற்படுத்திக்கொண்டவை என்றும், இந்த மரணம் தற்கொலையால் ஏற்பட்டது என்றும் பிரேதப் பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்திய குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அவர் காயங்களை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்ட கத்தியானது, அவரது வீட்டில் பயன்படுத்தப்பட்ட ஒன்று என்றும், அதில் இரத்தக்கறை படிந்திருந்தது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் நடத்திய விசாரணை
இவ்விடயம் தொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையில் கிடைத்த சாட்சியங்களின்படி,
நிதி மோசடி காரணமாக அவரது பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாலும், குற்றப்புலனாய்வுத்துறையால் பல நாட்கள் நடத்தப்பட்ட விசாரணைகளாலும் அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

மறைந்த ரங்க நிஷாந்த ராஜபக்ஷ இரண்டு மகள்களின் தந்தை ஆவார். மூத்த மகள் பல்கலைக்கழகத்திலும், பதினைந்து வயதான இரண்டாவது மகள் பாடசாலையிலும் படித்து வருகின்றனர். அவரது மனைவி பாடசாலை ஆசிரியை ஆவார்.
மேலும், இந்த சம்பவத்தின் மூலம் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் சமுதாயத்தின் முன் தான் சந்திக்க நேரிடும் அவமானத்தைப் பற்றி அவர் இறப்பதற்கு முன்பு மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பாக குடும்ப உறுப்பினர்களாலும், பிரேதப் பரிசோதனையின்போது அவரது மனைவியும் மகளும் அளித்த சாட்சியங்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.