மட்டக்களப்பில் நிலப் பகுதியொன்றை வேலியிட்டு அடைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு
மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிச்சல் நிலப் பகுதியினை இன்று காலை வேலியிட்டு அடைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கல்லடியை ஊடறுத்து கல்லடி பாலத்தினை இணைக்கும் வகையில் உள்ள குறித்த வடிச்சல் பகுதியை இன்று சிலர் வேலியடைக்க முற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் அறிந்து குறித்த பகுதியில் உள்ள கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பிரதேச கிராம சேவையாளர் உட்பட கிராம மக்கள் அப்பகுதிக்கு வந்து குறித்த சம்பவத்தினை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது அங்கு வந்த பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யப்படும் பொது மக்களிடம் தெரிவித்துள்ளார்.
சில காலங்களாக போலி உறுதிகளைக் கொண்டு குறித்த பகுதியை அபகரிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொது மக்கள் அதனை தடுத்து நிறுத்தி வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வடிச்சல் பகுதி ஊடாகவே மழை காலங்களில் நொச்சமுனை தொடக்கம் கல்லடி வரையான பகுதிகளில் உள்வரும் வெள்ளநீர் வடிந்து கல்லடி வாவியில் கலப்பதாகவும், குறித்த பகுதியை அடைத்தால் அந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த பகுதிகளை பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும், உரிய அதிகாரிகளும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் காரணமாக கல்லடி பாலம் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.








