விவசாய காணியை ஒரு சிலரின் தூண்டுதலுடன் அபகரிக்க முயற்சி - மன்னாரில் போராட்டம்
மடு திருத்தலத்திற்கு உரிய கோயில் மேட்டை விவசாய காணி அபகரிப்பு செய்யப்பட்டு வருகின்றமையை கண்டித்து மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் சின்னப் பண்டிவிரிச்சான் கிராம மக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் பஜார் பகுதியில் அமைதியான முறையில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்றையதினம் காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நீண்ட காலமாக மடு திருத்தலத்திற்குச் சொந்தமாகக் காணப்பட்ட குறித்த காணியைச் சிலரின் தூண்டுதலுக்கு அமைவாக அபகரித்து வருவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த பகுதியில் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்துள்ள நிலையில், தற்போது ஒரு சில தீய சக்திகளால் மத பிரச்சினையைத் தோற்றுவிக்கும் நிலையை ஏற்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மடு திருத்தலத்திற்கான கோயில் மோட்டை காணியானது பல வருடங்களைக் கொண்டுள்ள நிலையில், மடு ஆலய நிர்வாகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையிலே குறித்த காணி தொடர்பாக சில விஷமிகளால் மத பிரச்சனைகளைத் தூண்டி, குறித்த காணியை அபகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் .
குறித்த கிராமங்களில் ஏழை விவசாயிகள் இருக்கின்ற நிலையில் ஒரு குழுவினர் தாங்கள் ஏழை விவசாயிகள் எனக் கூறிக்கொண்டு குறித்த காணியை அபகரிக்க முயற்சி செய்து வருகின்றதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஜார் பகுதியிலிருந்து மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாகச் சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்துள்ளனர்.
பின்னர் வட மாகாணத்தின் புதிய ஆளுநருக்கு எழுதப்பட்ட மகஜர் மன்னார் மாவட்ட
அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெலிடம் கையளிக்கப்பட்டதோடு, துரித
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.