படையினரால் தாக்கப்பட்டவர்கள் கிளர்ச்சியாளர்களே தவிர போராட்டக்காரர்கள் அல்ல-ரணில் விளக்கம்
ஜனாதிபதி செயலக வளாகத்துக்கு முன்பாக மக்கள் முன்னெடுத்த அமைதி வழிப் போராட்டத்தில் 14 ஆம் திகதிக்கு பின்னர் கிளர்ச்சிக்கான ஆயத்தங்களே முன்னெடுக்கப்பட்டு வந்தன. அங்கு நின்றவர்கள் வன்முறையை விரும்பினார்கள். அதனால்தான் அவர்களை ஜனாதிபதி வளாக பகுதியிலிருந்து படையினரும் பொலிஸாரும் அகற்றியுள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் அமைச்சர்கள் சிலருடன், காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
போராட்டத்தின் நோக்கம்
அவர் மேலும் தெரிவித்ததாவது, "காலிமுகத்திடல் போராட்டத்தை நான் ஆதரித்தேன். பிரதமராக பதவியேற்க முன்னரும், பிரதமராக பதவியேற்ற பின்னரும் அவர்களை ஆதரித்தேன். போராட்டத்தின் செயற்பாட்டாளர்கள் என்னை சந்தித்திருந்தனர். அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருந்தேன்.
அந்த போராட்டத்தின் நோக்கம், ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்றுவது தான். அந்த மக்கள் போராட்டம் கடந்த 14ஆம் திகதி மாபெரும் வெற்றியுடன் முடிவுக்கு வந்து விட்டது.
தாக்குதலுக்கான காரணம்
அதன் பின்னர் ஜனாதிபதி செயலக வளாகத்தில் அரசியல் பின்னணியுடன் கிளர்ச்சிக்கான
ஆயத்தங்கள்தான் முன்னெடுக்கப்பட்டன. அங்கு நின்றவர்கள் வன்முறையை நாடினார்கள்.
அதனால்தான் அவர்களை அங்கிருந்து படையினரும் பொலிஸாரும் அகற்றியுள்ளனர்.
இப்போது அவர்கள் அமைதி வழியில் போராடுகின்றார்கள் என்றுகூறி, மக்கள்
போராட்டத்தை கொச்சைப்படுத்தக் கூடாது" என கூறியுள்ளார்.