மல்லாவியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் : பொலிஸார் பொறுப்பற்று செயற்படுவதாக குற்றச்சாட்டு
முல்லைத்தீவு - மல்லாவி புகழேந்தி நகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்களை கைது செய்வதில் பொலிஸார் அசமந்தப் போக்கை காட்டி வருவதாகவும் இதனால் தங்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி தனது கால் நடைகளை பராமரித்து பட்டியில் அடைத்து விட்டு அந்த உறவினர் வீட்டில் தங்கியிருந்த இளம் குடும்பஸ்தர் மீது இரவு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 0 4 பேர் கொண்ட குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த இளம் குடும்பஸ்தர் கடுமையான வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதே நேரம் குறித்த வீட்டின் உரிமையாளர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதும் குறித்த சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படாததால் தொடர்ந்தும் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸாரை எமது பிராந்திய செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது, புகழேந்தி நகர் பகுதியில் கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பல் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நடராஜா அகிலன் (வயது-36) என்பவரிடமிருந்து நேற்று வாக்குமூலங்களை பெற்றுள்ளோம்.
அதனடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் பதிலளித்துள்ளனர்.




