சுரேஷ் சலே தொடர்பில் அஸ்கிரி மகாநாயக்க தேரரின் கோரிக்கை
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பாக அவரது மனைவி விடுத்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு, அவருக்கு உரிய நிவாரணத்தை வழங்குமாறு அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் கோரியுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்ததன் மூலம் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சுரேஷ் சலேவின் மனைவியான திருமதி எச். பி. எம். எஸ். பி. சலே (மனோரி சலே) விடுத்த மேன்முறையீடு தொடர்பிலேயே இக்கடிதம் அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2026.06.08 அன்று அஸ்கிரி விகாரைக்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மனைவி, தன்னை நேரில் சந்தித்து தனது கணவருக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பிப்பதற்காக அவர் வழங்கிய அந்த மேன்முறையீட்டு மனுவின் பிரதி ஒன்று இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என அஸ்கிரி பீடாதிபதி தெரிவித்துள்ளார்.
குறித்த கோரிக்கையை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கு தகுந்தவாறு நியாயமான முறையில் நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் சலே தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.