சிவில் செயற்பாட்டாளர் அசேல சம்பத் கைது
சிவில் செயற்பாட்டாளர் அசேல சம்பத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அசேல சம்பத், பொதுமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் அழைப்பாளராகத் திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அசேல சம்பத்தின் முகநூல் பக்கத்தில் அவரது கைது தொடர்பில் காணொளியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் சதொச நிறுவனத்தினால் விநியோகம் செய்யப்படும் நிவாரணப்பொதி குறித்து பிழையான தகவல்களை வெளியிட்டதாகத் தெரிவித்து அசேல சம்பத் மீது அமைச்சர் பந்துல குணவர்தன முறைப்பாடு செய்திருந்தார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் அசேல சம்பத்தை காவல்துறையினர் இன்று கொழும்பு கோட்டையில் வைத்து கைது செய்துள்ளனர்.
எனினும், அசேல சம்பத் கைது செய்யப்பட்டமை குறித்து காவல்துறையினர் உறுதி செய்த போதிலும் அவரது கைதிற்கான காரணங்களை இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.