அசாத் சாலி நினைத்தவாறு எதையும் பேச முடியாது! - சரத் பொன்சேகா
அசாத் சாலி தான் விரும்பும் எதையும் பற்றி அறிக்கைகளை வெளியிட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “எந்தவொரு நாட்டிலும் சட்டம் ஒழுங்கு உள்ளது, அசாத் சாலி தான் விரும்பும் எதையும் பற்றி அறிக்கைகளை வெளியிட முடியாது. அவர் விரும்புவதைப் போல கதைக்கவும் முடியாது.
அப்படியாக இருக்க வேண்டும் என்றால் உலகில் சட்டங்கள் இல்லாத இடத்தில் அசாத் சாலி வாழ வேண்டும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று மாலை தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார்.
கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், அசாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தொன்று தொடர்பிலேயே அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.