அம்பாறை பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் (Video)
அம்பாறை - அறுகம்பை சுற்றுலா மையம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் வீழ்ச்சியடைந்து தற்போது அதிலிருந்து மீண்டு வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இயற்கை எழில்மிகு பிரதேசங்கள் பலவற்றைக் கொண்டமைந்த எமது இலங்கைத் தேசமானது மன்னர்களின் ஆட்சி காலம் முதல் மக்களாட்சி காலம் வரை மக்களின் பொழுதுபோக்கு சொர்க்க பூமியாகவே இருந்து வருகின்றது.
இதற்கமைய யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட புராதன இடங்களுக்கு மட்டுமே சென்று வந்த சுற்றுலாப் பயணிகள் தற்போது அதிகளவில் கரையோரப் பிரதேசங்களின் எழில்மிகு அழகிய காட்சிகளை கண்டு அனுபவிக்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
அந்நிய செலாவணி அதிகரிப்பு
இதன் மூலமாக அதிக நாட்கள் நாட்டில் தங்கியிருக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படலாயிற்று. இதனால் எமது நாட்டின் அந்நிய செலாவணி வருமானத்தில் கணிசமான அதிகரிப்பு தோன்றியுள்ளது.
1996ம் ஆண்டு இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறுகம்பை சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, பின்லாந்து, ஸ்பெயின், இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து அறுகம்பே பகுதிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
கோவிட் தொற்று
மேலும் இப்பகுதி மக்கள் 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் மற்றும் இந்நாட்டை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகிய கோவிட் 19 நோய்தொற்று காரணமாக பொருளாதார மற்றும் இயல்பு வாழ்வில் பாதிப்பிற்கு உள்ளாகியதுடன் உல்லாச பிரயாணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.
கிழக்கு மாகாண மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பல பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளங்களை நாடி உல்லாச பிரயாணிகள் படையெடுத்துள்ளனர்.
இதற்கமைய திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளிக் கடற்கரை, மாபில் கடற்கரை, திருகோணஸ்வர ஆலயம், கிண்ணியா சுடுநீர் கிணறு போன்ற பிரதேசங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடா அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் உல்லை மற்றும் அருகம்பை ஆகிய பிரதேசங்கள் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளங்களை நாடி உல்லாச பிரயாணிகள் படையெடுத்துள்ளனர்.
குறிப்பாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் வரை இப்பகுதி மிகுந்த சுறுசுறுப்பாகவே காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.