ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டும்..!

Election Commission of Sri Lanka Sri Lanka Politician Sri Lanka Government Election
By Nillanthan Jan 09, 2024 11:43 PM GMT
Report

அண்மையில் கோண்டாவில் உப்புமடச் சந்தியில்,ஒரு சமகால கருத்தரங்கு இடம்பெற்றது.தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் அக் கருத்தரங்கை ஒழுங்குபடுத்தியது. அதற்குத் தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் சொன்னார்… தனக்கு தெரிந்த பலர் ஒரு வேளை உணவை, குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பதாக. காலை உணவைக் கட்டாயம் எடுக்க வேண்டும், இரவு உணவைத் தவிர்க்கலாம் என்று தான் ஆலோசனை கூறியபோது, அவர்கள் சொன்னார்களாம்,காலை சாப்பிடாவிட்டால் அன்றைய அலுவல்களில் மூழ்கும்போது பசி தெரியாது. ஆனால் இரவு சாப்பிடாவிட்டால் பசி தெரியும்; நித்திரை வராது என்று.

இதுதான் பெரும்பாலான கீழ் மத்தியதர வர்க்க குடும்பங்களின் நிலைமை. ஆண்டு இறுதியில் இதுதான் நிலைமை என்றால் தை பிறந்தாலும் வழி பிறக்குமா? சாதாரண மக்களுக்கு வழி பிறக்குமோ இல்லையோ,அரசியல்வாதிகள் அதிகாரத்தைச் சுவைப்பதற்கான புதிய வழிகளைத் தேடித் திறக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்காகப் புதிய கூட்டணி ஒன்றை நோக்கி ஒரு புதிய அலுவலகம் கடந்த முதலாம் தேதி ராஜகிரியவில் திறந்து வைக்கப்பட்டது. அதே நாளில், மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகிய ஷான் விஜயலால் டி சில்வா எதிரணியோடு அதாவது ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்.

இவர் தென்மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தவர். அவர் எதிரணியில் இணைந்து கொண்டதன் மூலம் எதிரணி தானும் பலமடைவதான ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றது. அதாவது ,புதிய ஆண்டு அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான தயாரிப்புகளோடு பிறந்திருக்கிறது என்று பொருள்.மக்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருக்கலாம்.மரக்கறிகளின் விலை வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து போகலாம்.

வரியானது மக்களை ஈவிரக்கமின்றிக் கசக்கிப்பிழியலாம். மோட்டார் சைக்கிள் ஒரு லக்சறிப் பொருளாக மாறலாம்.ஆனால் அரசியல்வாதிகளின் அதிகாரப்பசி குறையப் போவதில்லை என்பதைத்தான் ஆண்டின் தொடக்கம் நமக்கு உணர்த்துகின்றது. இவ்வாறு தென்னிலங்கையில் ஒரு ஜனாதிபதி தேர்தலை நோக்கி பிரதான கட்சிகள் ஏற்கனவே உழைக்க தொடங்கி விட்டிருக்கும் ஒரு பின்னணியில், தமிழ்த்தரப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது?

பகிஷ்கரிப்புக்கும் எதிராக கருத்து

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக முதலில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது குத்துவிளக்கு கூட்டணிதான்.சில மாதங்களுக்கு முன் கூட்டணியின் கூட்டம் மன்னாரில் நடந்த பொழுது ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது என்று அக்கூட்டு முடிவெடுத்தது.அந்த முடிவை வலியுறுத்தி கூட்டுக்குள் அங்கம் வகிக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டும்..! | Article About Presidential Election In Srilanka

சுரேஷ் அவ்வாறு கருத்து தெரிவித்த பின் அண்மையில் விக்னேஸ்வரன் அதற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தார்.ஒரு தமிழ் பொது வேட்பாளராகத் தான் களமிறங்கத் தயார் என்றும் அவர் அறிவித்துவிட்டார். இவ்வாறு விக்னேஸ்வரன் அறிவித்த பின் கஜேந்திரக்குமார் அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தார்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலை பகிஷ்கரிக்கும் என்பது அக்கட்சியின் நிலைப்பாடாகும்.

அதே சமயம் தமிழரசுக் கட்சி அதன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. அது தன் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் மினக்கெடுகின்றது. எனினும் சுமந்திரனுக்கு நெருக்கமான சாணக்கியன் தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற தெரிவுக்கும் பகிஷ்கரிப்புக்கும் எதிராகக் கருத்து தெரிவித்திருக்கிறார். தமிழரசுக் கட்சி யாராவது ஒரு சிங்கள வேட்ப்பாளரை நோக்கித் தமிழ் வாக்குகளைத் திருப்பும் நோக்கத்தோடிருந்தால், அக்கட்சி பொது வேட்பாளரை எதிர்க்கும்.

கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மூன்று ஜனாதிபதி தேர்தலின் போதும் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலிமையாக முன்வைத்தது,தமிழ்மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட சுயாதீனக் குழுதான்.கடைசியாக நடந்த ஜனாதிபதி தேர்தலையொட்டி உருவாக்கப்பட்ட அக்குழுவின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

எனினும்,அக்குழு அந்த முடிவை நோக்கி கருத்துருவாக்க வேலைகளைச் செய்தது. இம்முறை குத்துவிளக்குக் கூட்டணி அந்த முடிவை எடுத்திருக்கின்றது. குத்துவிளக்கு கூட்டணி இந்தியாவுக்கு விசுவாசமான ஒரு கூட்டணியாகப் பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டும்..! | Article About Presidential Election In Srilanka

சிங்கள வேட்பாளர் தென்னிலங்கையில் தோற்கடிக்கப்படும் ஆபத்து

இந்தியாவுக்கு ஆதரவான ஒரு கூட்டு என்று கருதப்படும் குத்துவிளக்கு கூட்டணி தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற கருத்தை கையில் எடுத்ததனால் அது இந்தியாவின் வேலையோ என்ற சந்தேகம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஏற்பட்டிருக்கலாம்.

முதலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டும் என்று பார்ப்போம். ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிச்சயமாக வெல்லப் போவதில்லை.ஆனால் அவர் பிரதான சிங்கள வேட்பாளர்களின் வெற்றிகளை சவால்களுக்கு உட்படுத்துவார்.எப்படியென்றால்,ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழ் கட்சிகள் கடுமையாக உழைத்தால்,தமிழ் வாக்குகள் பெருமளவுக்கு அவருக்குத்தான் விடும்.

அப்படி விழுந்தால்,பிரதான சிங்கள வேட்பாளர்களுக்கும் 50 வீதத்துக்கு மேலான வாக்குகள் கிடைக்காமல் போகக்கூடும்.இம்முறை இரண்டுக்கு மேற்பட்ட சிங்கள வேட்ப்பாளர்கள் அரங்கில் காணப்படுகின்றார்கள்.அதாவது சிங்கள வாக்குகளே சிதறும் ஒரு நிலமை.

இதில் தமிழ் வாக்குகளின் கிடைக்கா விட்டால்,எவருக்குமே முதற் சுற்று வாகுக்கு கணக்கெடுப்பில் வெற்றி கிடைக்காமல் போகலாம்.அப்பொழுது இரண்டாவது சுற்று வாக்கு கணக்கெடுப்புக்கு போக வேண்டிவரும். அதில் தமிழ் மக்கள் யாருக்கு தமது இரண்டாவது விருப்பு வாக்கை வழங்குகிறார்களோ அவரே வெற்றி பெறுவார்.

அதாவது யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதனை தமிழர்கள் தீர்மானிக்கக்கூடிய பேர வாய்ப்பைப் பரிசோதிக்கும் ஒரு முயற்சியே அது. பிரதான சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் வாக்குகள் கிடைக்காது என்றால், அவர்கள் தமிழ்த் தரப்போடு பேரம்பேச வருவார்கள்.

அப்பொழுது தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் ஒருவருக்கு தமிழ்மக்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கை அளிக்கலாம். அதாவது தமிழ் வாக்குகளை ஒரு சிங்கள வேட்பாளருக்கு “பிளாங்க் செக்”காக வழங்குவதற்கு பதிலாக பேர வாய்ப்பாக அதைப் பயன்படுத்துவது.

ஆனால் இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் தமிழ் மக்களோடு வெளிப்படையான ஓர் உடன்பாட்டுக்கு வரும் சிங்கள வேட்பாளர் தென்னிலங்கையில் தோற்கடிக்கப்படும் ஆபத்து அதிகமுண்டு என்பதுதான்.

ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டும்..! | Article About Presidential Election In Srilanka

குத்து விளக்கு கூட்டணி

அதனால் எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் தமிழ் மக்களோடு பேரம்பேசத் தயங்குவார்.ஆனால் அதுகூட தமிழ் மக்கள் வெளி உலகத்துக்கு ஒரு உண்மையைச் சொல்வதற்குரிய வாய்ப்பை உருவாக்கும்.அது என்னவெனில், சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் யாருமே இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ் மக்களுக்கு வெளிப்படையான வாக்குறுதிகளை வழங்கத் தயாரில்லை என்பதுதான்.

எனவே ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழ் மக்களுக்கு உள்ள பேர வாய்ப்புகளை பரிசோதிக்கலாமோ இல்லையோ,தமிழ் மக்களின் மக்கள் ஆணையை புதுப்பிப்பதற்கு உதவுவார்.அவர் தமிழ் மக்களின் உச்சபட்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் வாக்குகளைக் கேட்பார். தேர்தல் என்று வந்தால் அது ஒரு ஜனநாயகக் கொண்டாட்டம். அங்கே கட்சிகளுக்கு புது ரத்தம் பாச்சப்படும். கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக இறங்கி வேலை செய்வார்கள்.

கிராமங்கள்தோறும் கட்சி அலுவலகங்கள் திறக்கப்படும். கிராம மட்டத்தில் கட்சி வலையமைப்புகள் பலப்படுத்தப்படும்.ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி எல்லா கட்சிகளும் அவ்வாறு உழைக்கும் பொழுது, அது தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒரு தேசமாகத் திரட்டும்.

ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகளிலும் நடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தலில் போதும் தமிழ் மக்கள் ராஜபக்சங்களுக்கு எதிராகத் திரளாக வாக்களித்து இருக்கிறார்கள்.அவ்வாறு ஒரு சிங்கள வேட்பாளருக்கு எதிராக விழும் வாக்குகளை தமிழ் மக்கள் ஆணைக்கான வாக்குகளாக மாற்றினால் என்ன? கஜேந்திரகுமார் கூறுகிறார்,ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் இறுதியாக யாராவது ஒரு சிங்கள வேட்பாளரை ஆதரிப்பார் என்பதனால் அந்தத் தெரிவை தாம் ஏற்கவில்லை என்று.

மேலும் ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வை ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் அவ்வாறு ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் இங்கு ஏற்கனவே பார்த்ததுபோல,பிரதான சிங்கள வேட்பாளரோடு பேரம் பேசக்கூடிய நிலைமைகள் குறைவாக இருக்குமென்றால்,அதை தமிழ் மக்களின் ஆகப்பிந்திய ஆணையைப் பெறுவதற்கான ஒரு மறைமுக வாக்கெடுப்பாக தமிழ்மக்கள் பயன்படுத்தலாம்.தமது உச்சமான கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதனை வெளியுலகத்துக்கு எடுத்துக் கூறலாம்.

இந்த கோரிக்கையை முன்வைப்பது சுரேஷ் பிரேமச்சந்திரன் அல்லது குத்து விளக்கு கூட்டணி அல்லது விக்னேஸ்வரன் என்பதற்காக அதனை எதிர்க்கத் தேவையில்லை.அது தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்ற அடிப்படையிலாது அதைப் பரிசோதிக்கலாம்.

ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் ரணில், சஜித் உட்பட எல்லா சிங்கள வேட்பாளர்களையும் சவால்களுக்கு உட்படுத்துவார்.அவர்களை தமிழர்களை நோக்கி வரச்செய்வார். அல்லது அவர்கள் தமிழர்களுக்கு எதிரான வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய நிலைமைகளை ஏற்படுத்துவார்.அதாவது சிங்கள வேட்பாளர்களை அம்பலப்படுத்துவார்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக,அவர் தமிழ் மக்களின் ஆகப் பிந்திய மக்கள் ஆணையை வெளிக்கொண்டு வருவார். தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவார்.அந்த ஐக்கியத்துக்கு தகுதியானவர்கள் தலைமை தாங்கலாம்.

ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் கட்டாயமாக விக்னேஸ்வரனாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. கிழக்கிலிருந்து ஒருவரைத் தெரிவு செய்யதால் அது மிகச்சிறப்பு.ஒரு பெண்ணாக இருந்தால் அதுவும் சிறப்பு. அவர் ஒரு குறியீடு. கட்சிகளாக, வடக்குக் கிழக்காக,சமயங்களாக,சாதிகளாக,ஒரே கட்சிக்குள் இருவேறு குழுக்களாக, முகநூல் குழுக்களாக,சிதறிக்கிடக்கும் ஒரு சமூகத்தை, ஒரு தேர்தலை நோக்கியாவது ஆகக்கூடிய பட்சம் ஒரு தேசமாகத் திரட்ட அவருக்கு வாய்ப்பளித்தால் என்ன?

2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US