வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கைகள்
மட்டக்களப்பில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஏறாவூர் சவுக்கடியில் பகுதியில் வைத்து நேற்று (01.02.2023) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - அரசடி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரொருவரே வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய, களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இவற்றைக் கொண்டு செல்லப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ். கல்வியங்காடு
யாழ். கல்வியங்காடு பகுதியில் கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுவிட்டு 5 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று (02.02.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை ஒன்றின் அபிவிருத்திச் சங்க முரண்பாடு ஒன்று காரணமாக டென்மார்க்கில் உள்ள ஒருவர் பணம் அனுப்பி இந்த வன்முறையை வழிநடத்தியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் ஜனவரி மாத நடுப்பகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் லக்சாந் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நேற்று (01.02.2023) மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஜீவன்பாய் (சஜூவன் ), கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கிருஸ்ணன் மற்றும் கோப்பாயைச் சேர்ந்த 26 வயதுடைய சுதர்சன் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டனர் என்பொலிஸார் தெரிவித்தனர்.
முன்பகை காரணமாக இந்த அடாவடி மற்றும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: தீபன்
வாழைச்சேனையில் நகைகடை ஒன்றிலிருந்து தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கையடக்க தொலைபேசி உட்பட 6 இலச்சத்து 49 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (01.02.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கையின் போது 25 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பவன்