வரலாற்றில் இடம்பிடிக்கப் போகும் சபாநாயகர்.. உடன் கைது செய்யுங்கள்! - கம்மன்பில
சபாநாயகரை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தினார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் 10 ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் கைது செய்யுமாறும் குறிப்பிட்டார்.
கொழும்பில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
பல்வேறு முறைப்பாடுகள்..
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சபாநாயகர் மீது முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுகள் வருமாறு:-
வாசஸ்தல முறைகேடு: தாபன விதிக்கோவைக்கு முரணாக, அரச செலவில் பராமரிக்கப்படும் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தைத் தவிர்த்து, லோரிஸ் மாவத்தையில் உள்ள மற்றொரு இல்லத்தில் வசிப்பதுடன், அதற்காகப் பொதுமக்களின் வரிப்பணம் செலவிடப்படுகின்றது.

பணிக்குழாம் நியமனம்: உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சேவையாற்றாத 8 பேரைத் தமது பணிக்குழாமில் இணைத்து, அவர்களுக்காக மாதம் 7 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா அரச நிதி செலவிடப்படுகின்றது.
ஊழியர் நியமனத்தில் முறைகேடு: அமைச்சரவை அனுமதி இன்றி தகுதியற்ற நபர்களைத் தனிப்பட்ட பணிக்குழாமில் நியமித்தல்.
வாசஸ்தல மாற்றம்: அமைச்சரவை அனுமதியின்றி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை ஆராய்ச்சி மையமாக மாற்றத் தீர்மானித்தமை.
தனிப்பட்ட தேவைக்கு அரச சொத்து: தனிப்பட்ட செயலாளருக்கு அரச செலவில் இல்லம் ஒதுக்கியமை மற்றும் குளிரூட்டி இயந்திரத்தைப் பழுதுபார்க்க நாடாளுமன்றப் பணியாளர்களைப் பயன்படுத்தியமை.
ஊடகப் பிரிவு மோசடி: அதிகாரப்பூர்வமற்ற ஊடகப் பிரிவுக்காக அரச வாகனங்கள் மற்றும் உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை. இது தொடர்பில் ஏற்கனவே முன்னாள் பிரதி செயலாளர் நாயகம் முறைப்பாடு செய்துள்ளார்.
வரலாற்றில் இடம்
இரட்டை எரிபொருள் மானியம்: சபாநாயகர் பதவிக்கான மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான எரிபொருள் மானியங்களை ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்வது.

இது குறித்து உதய கம்மன்பில மேலும் கூறுகையில்,
"கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதி இந்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. ஆனால், அவர் அதனைப் பெட்டியில் பூட்டி வைத்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பலமுறை கோரியும் எனக்கு அது கிடைக்கவில்லை. தற்போது தபால் மூலம் அந்த அறிக்கை என் கைக்கு கிடைத்துள்ளது. ஒழுக்கக்கேடான சில தகவல்களைத் தற்போதைக்கு வெளிப்படுத்தவில்லை, வெளிப்படுத்தினால் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்படும்." - என்றார்.
"இந்த அறிக்கை ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையே பிளவை ஏற்படுத்தும். இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் இந்த அறிக்கையை அடுத்த வாரம் கையளிக்கவுள்ளோம். பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்பட்ட சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன வரலாற்றில் இடம்பிடிப்பார்." என்று அவர் மேலும் எச்சரித்தார்.
மெஸ்ஸிக்கு ஒருமுறை இல்லை! FIFA வரலாற்றிலேயே இருமுறை Golden Boot வாங்கிய முதல் வீரர் இவர்தான் News Lankasri
படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் News Lankasri