காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்ய பொதுமக்கள் கோரிக்கை
காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்து கடும் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரூவன்புர பகுதியில் நேற்று (09.02.2024) இனந்தெரியாத விசமிகளால் பாதுகாப்பு வனப்பகுதிக்கு தீ வைக்கப்பட்டதில் பல ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ள நிலையிலேயே மக்கள் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தினால் நாட்டுக்கே உரித்தான அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், மூலிகைச் செடிகள் உட்பட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளது.
வறட்சியான காலநிலை
எனினும், வறட்சியான காலங்களில் தொடர்ச்சியாக காடுகளுக்கு தீ வைக்கப்படுவதனால் காட்டு விலங்குகள் குடிநீர் தேடி மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வரக்கூடிய அபாயம் நிலவுகின்றது.
இந்நிலையில் உயிரினங்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகுவதோடு குறித்த வனப்பிரதேசங்களுக்கு அண்மித்த இடங்களிலிருந்தே குடிநீர் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
எனினும், காடுகளுக்கு தீ வைப்பதனால் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் காணப்படுகின்றது.
பாதுகாப்பு பிரிவினர்
மேலும், மத்திய மலைநாட்டில் வறட்சியான காலநிலையினை தொடர்ந்து தற்போது பாதுகாப்பு வனப்பகுதிகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதனால் அரிய வகை தாவரங்கள், சிறிய விலங்கினங்கள் உட்பட குடிநீர் ஊற்றுக்கள் போன்றன அழிவுக்குள்ளாகி வருகின்றன.
எனவே, இது குறித்து பாதுகாப்பு பிரிவினர் காடுகளுக்கு தீ வைக்கும் விசமிகளை கைது செய்து உரிய தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |