ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்லட்டை இலங்கைக்கு அழைப்பதற்கான ஏற்பாடு
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்லட்டை இலங்கைக்கு அழைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த தகவலை வெளியுறவுத்துறை செயலாளர் ஜயநாத் கொலம்பே உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அழைப்பு பெரும்பாலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் முடிவடைந்ததன் பின்னர் விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் காண்பிக்கும் நோக்கிலேயே இந்த அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
ஏற்கனவே 2013ல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் அப்போதைய ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு அழைக்கப்பட்டார்.
பின்னர் 2016இல் அப்போதைய ஆணையாளர் அல் ஹுசைன் இலங்கைக்கு அழைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுக்களுடனான அறிக்கையை அமர்வில் சமர்ப்பித்திருக்கிறாரென்பதும் குறிப்பிடத்தக்கது.
