மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள தகவல்
நாட்டின் அனைத்து மதுபான விற்பனையகளும் மாலை 6 மணியுடன் மூடப்பட வேண்டும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கோவிட் பரவலை கருத்திற்கொண்டு மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பாத்திரங்களை விநியோகிக்கும் பணிகள் நாளை முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ,இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,மாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்குவரும். இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். சோதனைகள், கண்காணிப்புகள் இடம்பெறும்.
முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.
அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை மாகாணங்களுக்கு இடையில் செல்ல அனுமதி அட்டையாக பயன்படுத்தலாம்.
சுற்றுலா, உறவினர்களை சந்தித்தல், ஹோட்டல்களில் தங்குதல் உட்பட தனிப்பட்ட விடயங்களுக்காக மாகாணங்களில் இருந்து வெளியேறுவதற்கும், உள்நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்,கூட்டம், கருத்தரங்கு, கண்காட்சி, சமய நிகழ்வுகள், விருந்துபச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.