அறுவடை செய்யும் நெல்லுக்கான உரிய நிர்ணய விலை: கிளிநொச்சி விவசாயிகள் கவலை தெரிவிப்பு
கிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் மழை வெள்ளம் காரணமாக விவசாயிகள் நெல்லை அறுவடை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
கிளிநொச்சி, கண்டாவளை, புளியம்பொக்கணை, பெரியகுளம், பழைய வட்டக்கச்சி, முரசுமோட்டை போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ளம் தேங்கி காணப்படுவதுடன் ஏற்கனவே வெள்ளத்தினால் மூழ்கிய பெருமளவான வயல் நிலங்களை அறுவடை செய்வதிலும் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் அறுவடை செய்கின்ற நெல்லுக்கு உரிய நிர்ணய விலை இன்மையால் குறித்த நெல்லை சந்தைப்படுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
சந்தைப்படுத்துதல்
குறிப்பாக ஒரு மூடை நெல்லின் எடை 69 கிலோவாக இருக்கின்ற போதும் விவசாயிகளிடமிருந்து ஈர நெல் 75 கிலோவும் காய்ந்த நெல் 72 கிலோவும் மூடையாக கொள்வனவு செய்யப்படுகின்றது.
தற்போது அறுவடை செய்யும் சிவப்பு ஈர நெல் ஒரு கிலோ 112 ரூபாய்வுக்கும் காய்ந்த சிவப்பு நெல் 128 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுகின்ற அதேவேளை வெள்ளை ஈர நெல் ஒரு கிலோ 97 ரூபாய்வுக்கும் காய்ந்த வெள்ளை நெல் 113 ரூபாய்க்கும் குறைவாகவே தனியார் வியாபாரிகளால் கொள்வனவு செய்யப்படுகிறது.
அத்துடன் நெல்லின் தரம் என்பன பார்க்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து மேற்படி விலைகளில் இருந்து குறைந்த விலைகளிலும் கொள்ளளவு செய்யப்படுகிறது இவ்வாறு நெல்லை விற்பனை செய்வதில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதேவேளை பயிர் அழிவுகளுக்காக பதிவுகளை மேற்கொள்ளுகின்ற போதும் அவற்றுக்கான முழுமையான இழப்பீடுகளை தருவதற்கு காப்புறுதி சபை முன் வரவில்லை என்றும் விவசாயிகளுக்கு குறிப்பிட்டுள்ளனர்.