புற்று நோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணை நடத்த விசேட பொலிஸ் குழு நியமிப்பு
புற்று நோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குழுவில் 10 அதிகாரிகள் அங்கம் வகிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த குழுவிற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் தலைமை தாங்குவதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விநியோகிக்கப்பட்ட நிலையில் சந்தையில் இருந்து சேகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரியில் எப்லாடொக்சின் பதார்த்தம் கலந்தமை கண்டுபிடிக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யில் எப்லாடொக்சின் பதார்த்தம் கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. இதன்போது 15 மாவட்டங்களில் இருந்து 100 மாதிரிகள் தெங்கு ஆராய்ச்சி நிறுவகத்தினால் சேகரிக்கப்பட்டன.
எனினும் இந்த மாதிரிகளில் எப்லாடொக்சின் பதார்த்தம் அடங்கியிருக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார்.