அவுஸ்திரேலிய இராணுவத்திற்கு பெண் தளபதி நியமனம்
அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, அதன் தலைமைப் பொறுப்பிற்குப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கூட்டுத் திறன் பிரிவின் தலைவராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோயில் எதிர்வரும் ஜூலை மாதம் புதிய இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்பார் என்று அந்நாட்டு அரசாங்கம் இன்று அறிவித்தது.
2022 முதல் இப்பதவியிலிருந்த லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டுவர்ட்டிற்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
போர் நடவடிக்கை
சுமார் நாற்பது ஆண்டுகால இராணுவ அனுபவம் கொண்ட சூசன் கோயில், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்ற போர் நடவடிக்கைகளில் முக்கிய கட்டளைப் பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய இராணுவத்தில் நிலவி வரும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு தொடர்பான முறைப்பாடுகளுக்கு மத்தியில், பெண் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இது அவுஸ்திரேலிய இராணுவ வரலாற்றில் ஒரு மைல்கல் என்று வர்ணித்தார்.
போர்முறை
55 வயதான சூசன் கோயில், சைபர் போர்முறை (Cyber-warfare) உள்ளிட்ட நவீன பாதுகாப்புத் துறைகளில் பெற்றுள்ள அனுபவம், நாட்டின் பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்கும் முயற்சிக்கு வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அவுஸ்திரேலியப் பாதுகாப்புப் படையில் சுமார் 21 சதவீதத்தினர் பெண்களாக உள்ள நிலையில், 2030 ஆம் ஆண்டிற்குள் இதனை 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.