தோல்வியடைந்து வீரப்பெண்ணாக இருப்பதே மகிழ்ச்சி - அனுஷா சந்திரசேகரன் தெரிவிப்பு
கடந்த தேர்தல்களில் வெற்றி வெற்று பொம்மைகளாக இருப்பதை விட தோல்வியடைந்து வீரப்பெண்ணாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அனுஷா சந்திரசேகரன் தலைமையில் நேற்றைய தினம் (10.07.2025) சந்திப்பொன்று நோர்வூட் வெஞ்சர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஆணைக்காக காத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த முறை நாம் மைக் சின்னத்தில் போட்டியிட்டபோது நிறைய பேர் என்னிடம் கேட்டார்கள், அரசாங்கத்தோடு நீங்கள் சேர்ந்து கேட்டிருந்தால் வெற்றியடைந்திருப்பீர்கள், தனியா கேட்டனால் தான் தோல்வியடைந்து விட்டீர்கள்னு.... இன்று அரசாங்கத்தோட பேரலையில வெற்றிப்பெற்ற நிறைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மலையகத்துல நுவரெலியா மாவட்டத்துல இருக்கிறார்கள்.
ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அரசாங்கம் என்றைக்கு ஆணை கொடுக்கும் மக்களுக்கு சேவை செய்யலாம்னு அரசாங்க மேல் மட்ட ஆணைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்ற மாதிரி தெரியல, என்னைக்கு ஆணை கிடைக்கும் அந்த ஆணை வந்தவுடன் சேவை செய்வோம் என ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
வெற்றி பெற்று இப்படி பொம்மையாக இருப்பதை விட தோல்வியடைந்து வீரப்பெண்ணாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. தோல்வியடைந்தாலும் விதையாக பிரதேச சபை ஆசனங்களை பெற்றிருக்கிறோம். இது இந்த விதை இன்னும் பெரிய விருட்சமாக மாறும்.
நானும் ஓய மாட்டேன்
அதை மாற்றாமல் என்னுடைய தந்தை சந்திரசேகரன் எப்படி ஓயவில்லையோ அதேபோன்று தலைவர் சந்திரசேகரனுடைய ஆசையின் படி அவருடைய ஆசியோடு அவருடைய கனவை நனவாக்காமல் இந்த அனுஷா சந்திரசேகரன் ஒருபோதும் ஓயமாட்டேன்.
உங்களுடைய வாக்குகளால தான் எங்களுடைய கட்சியின் வெற்றி சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது. எங்களுடைய என்பதை விட நம்முடைய கட்சி, நமது மாற்றம், நம்முடைய கட்சியின் வளர்ச்சி உங்களால் தான் சாத்தியமாகியது. ஆகவே எம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.