நாடு திரும்பியதும் தமிழரசுக் கட்சியை சந்திக்கவுள்ள அநுர
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்திப்பதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோரிக்கை நிறைவேறும், தற்போது வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் தமிழரசுக் கட்சியைச் சந்திப்பதற்கான திகதியை வழங்குவார் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
தமிழரசுக் கட்சியின் கோரிக்கை
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் யார் உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்படுகின்றார்கள் என்பதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
சுய அரசியல் நலன்களுக்காகவே பலரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுகின்றனர்.
ஆனால், அந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்துச் செயற்படுகினறது. இந்த இலக்கை அடைவதற்கு அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடுவார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்திப்பதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோரிக்கை நிறைவேறும். தற்போது வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் தமிழரசுக் கட்சியைச் சந்திப்பதற்கான திகதியை வழங்குவார்.
பேச்சுவார்த்தை
எனினும், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் உண்மையான ஈடுபாடுக்கும் சுய அரசியல் நலன்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை அனைவரும் உணர வேண்டும்.
எவ்வாறாயினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இனப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு உத்தியோகபூர்வமாகக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், ஜனாதிபதியுடன் தமது கட்சி கடைசியாக நடத்திய பேச்சுவார்த்தை இடம்பெற்று வருடம் கடந்துவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது" என குறிப்பிட்டுள்ளார்.



