நாட்டு மக்களின் எதிர்பார்ப்பினை இந்த வருடம் நிறைவேற்ற முடியும்: அநுரகுமார நம்பிக்கை
புதியதொரு மாற்றத்தை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றத்தை இந்த வருடம் நிறைவேற்ற முடியும் என்று நம்புகின்றோம் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை அநுரகுமார திஸாநாயக்க எம்.பி நேற்று (19.01.2024) சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
"வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீட்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு உள்ளது. நாட்டு மக்களும் புதியதொரு மாற்றத்தையே எதிர்பார்க்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பும், எமது எண்ணமும் ஒன்றாக உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 18 தடவைகளுக்கு மேல் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். அரச தலைவர்கள் வராத நாடுகளுக்குக் கூட சென்று உரையாற்றுகின்றார். அதாவது அவர் ஜனாதிபதிப் பதவியைத் தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளார்.
அடுத்து என்ன தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார். ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் எனக் கருதுகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கும் அஞ்சுகின்றனர். ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை முதலில் நடத்துமாறு வலியுறுத்துகின்றோம்”என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


