இது சர்வாதிகாரத்தின் முதல் படி! நீதியரசர்கள் விவகாரத்தில் அரசுக்கு ராஜித கடும் எச்சரிக்கை
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது சர்வாதிகாரப் போக்கின் அறிகுறி என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சாடியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த ஆண்டு 2.3 பில்லியன் டொலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, இந்த ஆண்டு 4 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதத்தில் வைத்திருக்க வேண்டிய சூழலில், உலக வங்கி அதனை 3 சதவீதமாகவே கணித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை விட்டுச் செல்லும்போது இருந்த அதே 6 பில்லியன் டொலர் மட்டத்திலேயே வெளிநாட்டு கையிருப்பு தேக்கமடைந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் பொருளாதார நிலை மோசமடையக்கூடும் என எச்சரித்துள்ள நிலையிலும், அரசு அதற்குத் தீர்வு காணாமல் அரசமைப்புத் திருத்தங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றது.
சர்வஜன வாக்கெடுப்பு
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் ஒன்பது நீதியரசர் வெற்றிடங்கள் உள்ளன. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமல், ஏன் பதவிக்காலத்தை நீடிக்க இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள்? இது சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிபதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.

இவர்களுக்கு ஒரு சலுகை வழங்கினால், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மருத்துவர்கள் என அனைவரும் இதே கோரிக்கையை விடுப்பார்கள்.
இவ்வாறான சர்வாதிகாரப் போக்கு நாட்டின் எதிர்காலத்துக்குப் பெரும் ஆபத்தாகும். நிர்வாகத் துறை மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்றால் பொதுமக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு கோர வேண்டும்.
தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்று சொன்னவர்கள், இன்று அதிகாரத்தைப் பலப்படுத்த அரசமைப்பைத் திருத்த முற்படுகின்றார்கள்.
மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் மீது சர்வதேச கண்காணிப்பு உள்ளஇன்றைய சூழலில், இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.