மலையக மக்களை ஏமாற்றுகின்றதா அநுர அரசாங்கம்..! மனோ அழுத்தம்
பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் காணி உரிமை தொடர்பில் தற்போதைய அரசு தனது உண்மையான கொள்கையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தினார்.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,
"எங்கள் மக்கள் 'தேவதூதர்கள் வந்துவிட்டார்கள்' என நம்பி இந்த அரசுக்கு வாக்களித்தனர்.
மலையக மக்கள்
ஹட்டன் பிரகடனத்தில் காணி உரிமை குறித்துக் கூறி வாக்குகளைப் பெற்ற அரசு, தற்போது அது குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன்? இது தொடர்பில் தமக்கான கொள்கையை வெளிப்படையாகவும், வார்த்தை ஜாலங்கள் இல்லாமலும் அரசு அறிவிக்க வேண்டும்." - என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பெருந்தோட்டக் காணிகள் அரசுக்குச் சொந்தமானவை என்றும், நிறுவனங்கள் வெறும் குத்தகைதாரர்கள் மட்டுமே என்றும் சுட்டிக்காட்டிய அவர்,
தோட்டங்களில் மக்கள் மேற்கொள்ளும் கட்டுமானங்களை 'அத்துமீறியவை' எனக் கூறித் தடுப்பதற்கும், உடைப்பதற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அரசு நிறுவனங்களே அனுமதி வழங்குகின்றன எனவும் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, பெருந்தோட்ட அமைச்சின் கீழ் உள்ள கண்காணிப்புப் பிரிவு மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்தும் அவர் விமர்சித்தார்.
மனோ கணேசன் எம்.பி.
மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான அரசின் நிலைப்பாட்டை உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், அரசின் காணி உரிமை கொள்கை வரையறுக்கப்படும் வரை, வீடில்லா மக்கள் மேற்கொள்ளும் கட்டுமானங்களை 'அத்துமீறியவை' எனக் கூறி வழக்குத் தொடர்வதையோ அல்லது அவற்றை உடைத்து அகற்றுவதையோ உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.

நல்லாட்சி அரசின் போது, தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற ஒப்புதலுடன் 'ஏழு பேர்ச் காணி, தனி வீடு' என்ற உரிமையைச் சட்டபூர்வமாக ஆரம்பித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.
200 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை நோக்கிய அந்தப் பயணத்தை, இந்த அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri