கொத்தலாவல பல்கலை மாணவர் சேர்க்கையில் அநுர- ஹரிணி இடையே கருத்து வேறுபாடு
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தீர்மானத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் கருத்து வேறுபாடு நிலவி வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
திடீரென வெளியிட்ட அறிவிப்பு
“கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நூற்றுக்கணக்கான தேசிய மாணவர்கள் கற்றுவரும் நிலையில், இந்த வருடத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக கடந்த மே மாதம் 21ஆம் திகதி பல்கலைக்கழக மருத்துவ பீட இணைத்தளத்தில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
ஆனால் மறுநாள் 22ஆம் திகதி பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜயசேகர, இதன் பின்னர் இந்த பல்கலைக்கழகத்துக்கு பாதுகாப்பு படையினர் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் மாத்திரமே இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அரசாங்கம் இவ்வாறு திடீரென வெளியிட்ட அறிவிப்பால், பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க காத்திருந்த மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
இவர்கள் கடந்த காலங்களில் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பணம் செலுத்தி கல்வி கற்பதற்கு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடம் ஆரம்பித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
அதன் காரணமாக செய்டம் பல்கலைக்கழகம் நிறுத்தப்பட்டது. அதேபோன்று 2002இல் அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தை எமது நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கம்
தற்போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவர்களை இணைத்துக்கொள்வதை நிறுத்த எடுத்த நடவடிக்கை மூலம் அவர்கள் மீண்டும் தங்களின் பழைய கொள்கையை ஆரம்பித்துள்ளார்கள்.
பிரதமர் இந்த விடயத்தில் உறுதியாக இருந்து, இந்த பல்கலைக்கழகம் படையினருக்கு மாத்திரம் உயர் கல்வியை கற்றுக்கொள்ளும் இடமாற்ற மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவந்தபோதும் இறுதியில் ஜனாபதி தலையிட்டு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கிறது.
என்றாலும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடை இதுதொடர்பில் இடம்பெற்றுவரும் பனிப்போர் காரணமாக மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர். அதனால் இவ்வாறான தீர்மானம் எடுக்கும்போது அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டில் இருந்து தீ்ர்மானம் எடுத்து நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.