வவுனியாவில் வீதிகளில் நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை - நால்வருக்கு தொற்று உறுதி
வவுனியாவில் அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் நடமாடியவர்களுக்கு வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று (23.08) மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் முடக்க நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறிச் செயற்படுபவர்கள் மீது பொலிஸாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், வவுனியா நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சுகாதாரப் பிரிவினரும், பொலிஸாரும் இணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், வீதியில் நடமாடியவர்களை வழிமறித்து அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா, குருமன்காடு சந்தி, பசார் வீதி மற்றும் ஹொரவப்பொத்தானை வீதி என்பவற்றில் துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் நடமாடியவர்கள் 38 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதில் ஆச்சிபுரம், மடுகந்தை, தரணிக்குளம், மதவாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் சுகாதாரப் பிரிவினராலும், பொலிஸாராலும் எச்சரிக்கப்பட்டு வீடுகளுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
