காத்தான்குடியில் 147 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை! 7 பேருக்கு தொற்று உறுதி
தனிமைப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிய காத்தான்குடி பரீட் நகர் பள்ளிவாயல் வளாகத்தில் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் சனிக்கிழமை இடம்பெற்றது.
மட்டக்களப்பு தொற்று நோயியல் வைத்திய அதிகாரி டாக்டர் வே.குணராஜசேகரம் அவர்களின் வழிகாட்டலில், காத்தான்குடி மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் ஹசனின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளினால் இந்த அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 147 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையின் போது 7 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தொற்றாளர்களாக என அடையாளப்படுத்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இந்த அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டவர்களாகும் என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.