எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் பிரான்சில் உயிரிழப்பு!
மறைந்த அமெரிக்கக் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மோடலிங் முகவரான டேனியல் சியாட் (69), பாரிஸ் நகருக்கு வெளியே உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை மாலை இவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பிற்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நன்டேர் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எப்ஸ்டீனுடன் தொடர்பு
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டேனியல் சியாட்டின் பெயர் சுமார் 2,000 முறை இடம்பெற்றுள்ளது.

பிரெஞ்சு ஊடகங்களின்படி, சியாட் மீது குறைந்தது ஐந்து பெண்கள் பாலியல் துர்நடத்தை மற்றும் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தனர். இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சியாட் மறுத்திருந்தார்.
இது குறித்து சியாட்டின் வழக்கறிஞர் மெய்னா அரப்-டிக்ரைன் தெரிவிக்கையில், "டேனியல் சியாட் தனது நிரபராதித்தனத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தார், எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் உயிரிழப்பு
மேலும், அவர் மீது இதுவரை எந்தவொரு முறையான நீதிமன்ற வழக்குகளும் தொடரப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரான்சில் எப்ஸ்டீனுடன் தொடர்புடை நபர்களில் உயிரிழக்கும் இரண்டாவது நபர் சியாட் ஆவார்.
இதற்கு முன்னர், 2020இல் கைதுசெய்யப்பட்ட மோடலிங் முகவர் ஜீன்-லூக் புருனல் என்பவர் 2022ஆம் ஆண்டு தனது சிறை அறையில் தூக்கிட்டுத் தவறான முடிவெடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.