கனடாவில் பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை வம்சாவளி மருத்துவர்
கனடாவின் டொராண்டோவில் உள்ள Hospital for Sick Children மருத்துவமனையில் பணியாற்றும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகள் தொடர்பான பாலியல் துர்நடத்தை மற்றும் சுரண்டல் உள்ளடக்கங்களை வைத்திருந்ததாகவும், அவற்றை அணுகியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை வம்சாவளி மருத்துவர்
44 வயதான திஸாநாயக்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்னணு சாதனத்தை பயன்படுத்தி குறித்த உள்ளடக்கங்களை அணுகி பதிவிறக்கம் செய்ததாக கூறப்படும் விசாரணையின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணை கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் மருத்துவமனை மற்றும் அவரது தனியார் இல்லத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, பணிக்காக பயன்படுத்தப்பட்ட கணினி உட்பட பல மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
திஸாநாயக்க மீது குழந்தைகள் தொடர்பான பாலியல் துர்நடத்தை மற்றும் சுரண்டல் உள்ளடக்கங்களை வைத்திருந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவற்றை அணுகியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவர் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலையாகவிருந்தார். எனினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனை கண்டனம்
இந்த உள்ளடக்கங்கள் அவரது மருத்துவர் பணியுடன் தொடர்புடையவை என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், Hospital for Sick Children மருத்துவமனை இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தாங்கள் மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. பொலிஸார் குறிப்பிட்டுள்ள செயற்பாடுகளை மருத்துவமனை கடுமையாக கண்டித்துள்ளது.

விசாரணை தொடர்பான தகவல் கிடைத்தவுடன் திஸாநாயக்கவை உடனடியாக பணியில் இருந்து விடுப்பில் அனுப்பியதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கும் அவரது மருத்துவ சேவைக்கும் தொடர்பு இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.
நோயாளிகள் அல்லது அவர்களது குடும்பங்களுக்கு எந்த ஆபத்தும் இருப்பதாக தகவல் கிடைக்கவில்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளது.
திஸாநாயக்கவிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் குடும்பத்தினர் ஏதேனும் கவலைகள் இருந்தால், மருத்துவமனையின் நோயாளர் தொடர்பு பிரிவை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.