யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக, இமானுவேல் ஆனோல்ட் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கின் விசாரணையில் கோரப்பட்ட நிவாரணம் தொடர்பில் மன்றினால் எவ்விதமான இடைக்கால தடை கட்டளையும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவுற்ற நிலையில் இன்றைய தினம் (07.03.2023) செவ்வாய்க்கிழமைக்கு கட்டளைக்காக திகதியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் கட்டளைக்காக வழக்கு அழைக்கப்பட்ட போது, இம்மானுவேல் ஆனோல்ட்டின் யாழ். மாநகர முதல்வர் பதவி பறிக்கப்பட்டிருந்த நிலையில் மனுதாரர்களால் கோரப்பட்ட இடைக்கால நிவாரணங்கள் தொடர்பில் கட்டளை ஆக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
எழுத்து மூல சமர்ப்பணங்கள்
தற்போது முதல்வராக ஆனோல்ட் இல்லாத காரணத்தால் வழக்கினை மனுதார்கள் கை வாங்கலாம் எனவும், வழக்கின் பிரதான விடயம் தொடர்பி்லும் ஆட்சேபணைகள் இருப்பினும் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் மனுதாரர்கள் எழுத்து மூல சமர்ப்பணங்களை செய்ய முடியும் என தெரிவித்து மன்று ஏப்ரல் 06ஆம் திகதி கட்டளைக்காக திகதியிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
2023 ஜனவரி 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் யாழ்.மாநகர சபையின் முதல்வராக இ.ஆனோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் யாழ்.மாநகர சபை முதல்வராகப் இமானுவேல் ஆனோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது.அதனடிப்படையில் அவரது பதவி நியமனம் குறித்த வர்த்தமானி அறிவித்தலைச் செல்லுபடியாற்றதாக அறிவிப்பதற்கும், முதல்வராக ஆனோல்ட் தொடர்வதற்கும் இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரியும் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் யாழ். மேல் நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.