கொழும்பு மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம்! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்
கொழும்பு மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு தொடர்பில் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற வளாகம், உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றம், கொழும்பில் உள்ள நீதவான் நீதிமன்றங்கள், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம், இலங்கை இராணுவம், கடற்படை, வான்படை மற்றும் காவல்துறை தலைமையகம் உள்ளிட்ட கொழும்பு மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை ஜனாதிபதி நேற்று வெளியிட்டார்.
இந்த பிரகனடனத்தின்படி, காவல்துறை மா அதிபரின் அனுமதியின்றி, அத்தகைய உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் அமைந்துள்ள வீதி, மைதானம், கரை அல்லது ஏனைய திறந்தவெளி பிரதேசங்களில் பொதுக்கூட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் யாவும் தடை செய்யப்படுகின்றன.
தகுதிவாய்ந்த அதிகாரசபை
தகுதிவாய்ந்த அதிகாரசபை அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது அனுமதியின் கீழ மாத்திரமே இந்த பிரதேசங்களில் வாகனங்களை நிறுத்தமுடியும்.
இந்த நிலையில் ஜனாதிபதியின் இந்த உத்தரவு, அதனை மீறுவோரை காவலில் வைப்பதற்கும், கருத்துச் சுதந்திரத்தை மீறுவதற்கும், அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்துக்கும் கடுமையான விதிகளை கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் நடமாடும் சுதந்திரத்துக்கும் இடை தடையை ஏற்படுத்துகிறது. இந்த உத்தரவுகளின் கீழ் ஒரு குற்றச் செயல் தொடர்பாகக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு மேல் நீதிமன்றத்தை தவிர வேறு நீதிமன்றங்களால் பிணை வழங்கப்பட மாட்டாது என்று கூறுவதன் மூலம் பிணை தொடர்பாக கடுமையான விதிகளை இந்த உத்தேச உத்தரவு விதிக்கிறது என்று சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
உயர்நீதிமன்றின் தீர்ப்பு
அத்துடன் எந்தவொரு நியாயமான அல்லது சட்டபூர்வமான அடிப்படையும் இல்லாமல், இந்த உத்தரவு குடிமக்களின் சுதந்திரத்தை கணிசமாகக் குறைக்க முற்படுகிறது என்றும் சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தநிலையில் 1993ஆம் ஆண்டு அமரதுங்க எதிர் சிறிமல் 'ஜனகோசா' வழக்கில் உயர்நீதிமன்றின் தீர்ப்பை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நினைவூட்டியுள்ளது.
நியாயமான எதிர்ப்பின் அமைதியான வெளிப்பாடானது, தவிர்க்கமுடியாமல், வேறொரு
நாளில் பேரழிவுகரமான வன்முறை வெடிப்புக்கு வழிவகுக்கும் என்று அந்த தீர்ப்பில்
கூறப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம்
சுட்டிக்காட்டியுள்ளது.