தடுப்பூசி தொடர்பில் இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் 30 வயதிற்கும் மேற்பட்டவர்கள் துரிதமாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுறுத்தியுள்ளார்.
30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இதுவரை தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத குறித்த வயது பிரிவைச் சேர்ந்தவர்கள் துரிதமாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய ,இதுவரை நாடளாவிய ரீதியில் 1,05,44,229 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
30 வயதிற்கு மேற்பட்ட 11.4 மில்லியன் பேரை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 10.54 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய,செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது அவசியமாகுமென அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.
எனினும்,நாட்டில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமை பெறாத காரணத்தினால் குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.