அம்பாறையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கட்டாக்காலி கால்நடைகள்
அம்பாறை (Ampara) மாவட்டம் கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் எதிர்நோக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.
கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் சுற்றித்திரியும் இவ்வாறான கட்டாக்காலி மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் பொது மக்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகின்றது.
தண்டப்பணம் அறவிட நடவடிக்கை
மேலும் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளருக்கு பலதடவைகள் உரிய தரப்பினரால் தெளிவுபடுத்தியும் உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
குறிப்பாக கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை அதிகரித்திருப்பதால் அவற்றைக் கைப்பற்றி உரிமையாளர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது இப்பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள், ஆடுகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.
பொது மக்கள்
பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் பொது மக்களுக்கு பெரும் தொல்லையாக இருப்பதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன.
அத்துடன் இரவு நேரங்களில் பெரும் எண்ணிக்கையிலான கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக நகரை ஆக்கிரமித்து அசுத்தப்படுத்தி வருவதும் துர்வாடை வீசுவதும் வர்த்தகர்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது.
எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த உரிய தரப்பினர் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |