அரசியல் இலாபத்துக்காகவே இனவாதம்..! ஆனந்த விஜேபால ஆதங்கம்
கடந்த காலங்களில் இனவாதம் தூண்டப்பட்டதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என ஒட்டுமொத்த நாடும் போரினால் பேரழிவைச் சந்திக்க நேர்ந்ததாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குருநாகல் - நிகவெரட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் இலாபத்துக்காக நடக்கும் நாடகம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் இலாபத்துக்காக நாட்டில் இனவாதத்தையும், மதப் பிரிவினையும் தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர் மீண்டும் நாட்டில் ஒருபோதும் இனவாதம், மதவாதம் அல்லது எந்தவொரு சதித்திட்டங்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை.

கடந்த காலங்களில் இனவாதம் தூண்டப்பட்டதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என ஒட்டுமொத்த நாடும் போரினால் பேரழிவைச் சந்தித்தது. இந்த மண்ணில் இலட்சக்கணக்கான மக்கள் தேவையற்ற போரினால் உயிரிழந்துள்ளனர்.
அத்தகைய கசப்பான அனுபவங்களை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய ஒரு நல்லிணக்க சமூகச் சூழல் கடந்த ஓராண்டு காலத்தில் கட்டியெழுப்பட்டுள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்த மற்றும் தீய எண்ணங்களால் தங்களின் அரசியல் இலாபத்துக்காக நாட்டில் இனவாதத்தையும், மதப் பிரிவினையும் தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர்.
எனினும் இந்த நாட்டில் மீண்டும் ஒருமுறை இனவாதத்தையோ அல்லது மதக் கலவரங்களையோ உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் எவ்விதத்திலும் இடமளிக்காது நாட்டில் தற்போது சட்டம் தன் கடமையைச் செய்யத் தொடங்கியுள்ளது. முன்னாள் ஆட்சியாளர்கள், அவர்களின் வாரிசுகள், உறவினர்கள் மற்றும் குற்றங்களுடன் தொடர்புடைய அரசியல் குழுக்கள் தற்போது குழப்பத்தில் கலக்கமடைந்துள்ளனர். சட்டத்துக்கு மேல் எவரும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது என்றார்.