அச்சுவேலியில் எரிபொருளுக்காக காத்திருந்த பாரவூர்தியுடன் விபத்துக்கு உள்ளாகி முதியவர் உயிரிழப்பு (Photos)
யாழ்.அச்சுவேலி பகுதியில் எரிபொருளுக்காகக் காத்திருந்த பாரவூர்தியுடன் விபத்துக்குள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரட்ணம் (வயது-72) என்ற முதியவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்றையதினம் நண்பகல் அச்சுவேலி - தெல்லிப்பழை வீதியில் இடம்பெற்றுள்ளது.
அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காகச் சென்ற பாரவூர்தி வரிசையில் நின்று செல்லும் போது, முன்னால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவரை மோதித்தள்ளியது.
அதன் போது, முதியவர் பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாரவூர்தி சாரதியைக் கைது செய்துள்ள அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பாரவூர்தியையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அதேவேளை கடந்த வாரம் புன்னாலைக்கட்டுவான் பகுதியில் எரிபொருள்
நிரப்புவதற்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த பயணி ஒருவர்
பேருந்தின் கீழ் இறங்கி இருந்த வேளை, பேருந்தினை சாரதி வரிசையில் முன்
நகர்த்திய போது, அதன் சக்கரத்தினுள் சிக்கி உயிரிழந்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.