அமெரிக்காவில் மீண்டும் பயங்கரமான துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் பிரபல வங்கி ஒன்றில் புகுந்த முன்னாள் ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 8 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஆயுதம் ஏந்திய பொலிஸார்
லூயிஸ்வில்லி பெருநகர பொலிஸ் அதிகாரிகள் குறித்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இரு பொலிஸார் காயங்களுடன் தப்பியதாகவும் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அதில் ஒருவர் பொலிஸ் அதிகாரி எனவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு தொடர்பில் தகவல் வெளியானதும், ஆயுதம் ஏந்திய பொலிஸார் வங்கிக்குள் அத்துமீறி நுழையும் நிலை எற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் தெரிவிக்கையில், லூயிஸ்வில் வங்கியில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சிலரை தனிப்பட்ட முறையில் தமக்கு அறிமுகமானவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஆயுததாரி பலி
துப்பாக்கிச் சூடு தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதும், 3 நிமிடங்களிலேயே பொலிஸார் சம்பவப்பகுதிக்கு விரைந்ததாகவும், ஆயுததாரியை எதிர்கொண்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் பதில் தாக்குதலில் அந்த ஆயுததாரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல்தாரியின் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் டென்னசி, நாஷ்வில்லி நகரில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.