மாகாண சபைத் தேர்தலை நடத்தும் திருத்தச் சட்டம் ஜனவரியில் நாடாளுமன்றத்திற்கு
மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்துவதற்கு தேவையான சட்டத்திருத்தம் எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்ற தேர்தல் சட்ட மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
மாகாண சபைகள் மூன்று வருடங்களுக்கு மேலாக செயலிழந்துள்ளதன் காரணமாக நாட்டில் பல பிரச்சினைகள் உருவாகி இருப்பதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksha), தெரிவுக்குழுவின் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு நபரால் மாகாண சபை நிர்வகிக்கப்படுவது நீதியானது அல்ல எனவும் உள்ளூராட்சி சபைகளும், நாடாளுமன்றமும் இயங்கும் போது, மாகாண சபை மாத்திரமே செயலிழந்துள்ளது.
இதன் காரணமாக மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையின் கீழ் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டத்திருத்தத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது பொருத்தமானது என தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) குறிப்பிட்டுள்ளார்.