வைத்தியசாலை நிர்வாகத்தினரின் பொறுப்பற்ற செயல்! பல மணிநேரம் நோயுடன் போராடிய மாணவி
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறையால் பல பிரச்சினைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு நோயாளிகள் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அந்தவகையில் இன்றையதினம் (11) 13 வயதான பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி மற்றும் மயக்கம் போன்ற நோயால் பீடிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்த போது மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமல் வைத்தியசாலை நிர்வாகத்தினர் பல சவால்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.
நோயாளர் காவு வண்டி தேவை
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
இன்று காலை உடையார் கட்டு மத்திய கல்லூரிக்கு கல்வி கற்க சென்ற குறித்த மாணவி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், பாடசாலை நிர்வாகத்தினர் மாணவியின் பெற்றோரை அழைத்து மாணவியை ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து சுகயீனமடைந்த மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மாணவியும் பெற்றோரும் நோயாளர் காவு வண்டிக்காக வைத்தியசாலையில் காத்திருந்துள்ளனர்.
மணிக்கணக்கில் காத்திருப்பு
இதனையடுத்து 3 மணிநேரத்தின் பின்னர் மாணவியின் தந்தை வைத்தியரிடம் சென்று கேட்டபோது, வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை காணப்படுவதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மற்ற நோயாளர்களை ஏற்றி செல்வதற்காக மணிக்கணக்கில் நோயாளர் காவு வண்டி காத்திருந்துள்ளது.
எனினும், இதுகுறித்து வைத்தியரிடம் தந்தை மீண்டும் கேட்ட பொழுது அனைத்து நோயாளர்களையும் ஒன்றாகத்தான் கூட்டிச் செல்ல வேண்டும். உங்களுக்குத் தேவை இருப்பின் சொந்த செலவில் உங்களது பிள்ளையை வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லுங்கள் என தெரிவித்த நிலையில் அங்கு முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளது.
நிர்வாகத்தின் அலட்சிய செயற்பாடு
சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடம் பேச முற்பட்ட மாணவியின் தந்தையையும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் அங்கிருந்த பொலிஸாரிடம் தெரிவித்து வெளியேற்ற முற்பட்டுள்ளனர்.
மேலும் மாணவியை தனியார் வைத்தியசாலைக்கு தான் அழைத்து செல்வதாக குறித்த தந்தை கூறிய போது கடிதமொன்றை எழுதித் தந்துவிட்டு அழைத்துச் செல்லுமாறு குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த சிறுமியை தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
