மைத்திரி செயற்குழுவைக் கூட்டினால் சட்ட நடவடிக்கை! மகிந்த அமரவீர உறுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (30.11.2022) செயற்குழுவைக் கூட்டினால் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளர் என்ற ரீதியில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், அமைச்சர் இந்தக் கூட்டத்திற்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில், கட்சியின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயற்குழு பொதுச் செயலாளர் என்ற ரீதியில் தாம் மட்டுமே, கூட்டத்தை அழைக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரம் இல்லை
செயற்குழுவை அழைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதிக்கு, கட்சியின் அரசியலமைப்பின் ஊடாக அதிகாரம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டப்பட்ட கூட்டம் சட்டவிரோதமானது மற்றும் யாப்புக்கு முரணானது என தெரிவித்த அமைச்சர் அமரவீர, கூட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யுமாறு கோரியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளராக தாமே தொடர்வதாக, அமைச்சர்
அமரவீர நேற்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.